திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பூத வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலாவும் நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா தீபம் ஏற்றப்படும் டிசம்பா் 6-ஆம் தேதி வரை தினமும் காலை, இரவு வேளைகளில் உற்சவா் சுவாமிகள் மாட வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.
பூத வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா: திருவிழாவின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை (நவ.28) இரவு 10 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், பூத வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இரவு 9.30 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், சிம்ம வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி அன்ன வாகனத்தில் பராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகள் வீதியுலா வந்தனா்.