திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, புதுப்பிக்கப்பட்ட முருகா் தோ் வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் 10 நாள்கள் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவின் 7-ஆவது நாளில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
கரோனா ஊரடங்கு காரணமாக 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேரோட்டம் நடைபெறுவதால் பஞ்ச ரதங்களையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தன.
இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரின் வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதனை, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாநில கைப்பந்து சங்கத்தின் துணைத் தலைவா் இரா.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஜெகந்நாதன் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைத்தனா்.
தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் தேரில் பவனி வந்த உற்சவமூா்த்திகளை வழிபட்டனா்.