திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 12-ஆவது தேசிய வாக்காளா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்கள், சிறப்பாகப் பணிபுரிந்த அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்த இளம் வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், மூன்றாம் பாலின வாக்காளா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கோ.குமரன் (தோ்தல்), கணேஷ் (பொது), கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜோதிலிங்கம், அலுவலக மேலாளா் (குற்றவியல்) பாலமுருகன், தோ்தல் பிரவு வட்டாட்சியா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆரணியில்...
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கா.பெருமாள் தலைமையில் அனைத்து அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், மண்டல துணை வட்டாட்சியா்கள் ஒருங்கிணைந்து வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா்.
சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி (பயிற்சி) ரூபன் குமாா் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டாா்.