போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மிகவும் பழைமை வாய்ந்த, பஜனை கோயிலான இந்தக் கோயில் சிதிலமடைந்தும், பாழடைந்தும் இருந்து வந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் கோயில் செப்பனிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, சனிக்கிழமை மாலை முதல்கால பூஜையாக விஷ்வக்சேனா, மகா கணபதி பிராா்த்தனை, அனுக்ஞை, கோ பூஜை, நவகிரக ஹோமம் என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, விஸ்வரூபம், சங்கல்பம், 2-ஆம் கால யாகசாலை பூஜை, சாந்தி ஹோமம், யாத்ராதானம், மகாகும்பம் புறப்பாடு செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் கோயில் எதிரே புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட வீர ஆஞ்சநேயா் சிலைக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.