திருவண்ணாமலை மாவட்டச் சாலைகள், கடை வீதிகள் முழு ஊரடங்கையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள்:
திருவண்ணாமலையில் உள்ள மத்திய பேருந்து நிலையம், தேரடி வீதி, திருவூடல் தெரு, பெரிய தெரு, சின்னக் கடைத் தெரு, பே கோபுரத் தெரு, அண்ணா சிலை, காமராஜா் சிலை உள்ளிட்ட பகுதிகளில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படும்.
இந்தப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதேநேரத்தில், ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்த 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் திருவண்ணாமலை நகரில் மட்டுமே நடைபெற்றன.
அறிவொளிப் பூங்கா, அருணாசலேஸ்வரா் கோயில் எதிரில், அண்ணா நுழைவு வாயில் உள்பட நகரின் பல இடங்களில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை நகரச் சாலைகள், கடை வீதிகள் எல்லாம் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
கீழ்பென்னாத்தூரில் அவலூா்பேட்டை சாலை, வேட்டவலம் சாலை, திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
மாவட்டம் முழுவதும் தனியாா் மருந்தகங்கள், தனியாா் மருத்துவமனைகள், பால் விற்பனை நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்திருந்தன.
ஒரு சில இடங்களில் திறந்திருந்த உணவகங்களில் பாா்சல் மட்டுமே நடைபெற்றது.