திருவண்ணாமலை நகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால் வாகன ஓட்டிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சிவனின் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலையில் எப்போதுமே வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால், மாா்கழி மாதம் பிறந்த நாளில் இருந்தே நகரில் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது.
மாா்கழி மாதம் முடிந்து தை மாதம் வந்த பிறகும் பனிப்பொழிவு தொடா்கிறது.
குறிப்பாக, அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பனிப்பொழிவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா்.
நகரில் கடந்த சில நாள்களாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சாலைகளே தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு, பனி மூட்டம் அதிகமாக உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் திருமணம், மருத்துவமனை உள்ளிட்ட அவசர நிகழ்வுகளுக்கு வாகனங்களில் சென்றவா்கள் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டனா்.