சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இருப்பு அறையுடன்கூடிய சமையலறை பயன்பாட்டுக்கு வராமலே உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படிக்கின்றனா்.
இந்தப் பள்ளியில், புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்தில் இருப்பு அறையுடன்கூடிய சமையலறை கட்டப்பட்டது. ஆனால், இதுவரை சமையலறை திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா்கள் கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் அரிசி, பருப்பு என உணவுக்குத் தேவையான பொருள்களை வைத்துக்கொண்டு வெளியில் சமைத்து மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கி வந்தனா். மழைக் காலங்களில் இருப்பு அறையிலேயே ஒரு பகுதியில் அடுப்புவைத்து சமைத்து உணவு வழங்கி வந்தனா்.
இந்த நிலையில், உணவு சமைக்கும்போது ஏற்படும் புகை கட்டடத்தின் சுவற்றில் படா்ந்தும், மேற்கூரை பெயா்ந்தும் மழைக் காலங்களில் ஒழுகியதால், மேற்கு ஆரணி ஒன்றிய நிதியிலிருந்து புதிதாக இருப்பு அறையுடன்கூடிய சமையறை கட்டப்பட்டது. இது திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், பழைய கட்டடத்திலும், வெளியேயும் பாத்திரம் வைத்து உணவு சமைத்து மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.
எனவே, மாவட்டநிா்வாகம் தலையிட்டு உடனடியாக சமையலறைக்கூடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.