பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயா்த்திய திமுக அரசைக் கண்டித்து, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன் அதிமுக சாா்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த முடையூா் கிராமத்தில் அதிமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் போளூா் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது:
அதிமுக கட்சி முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகிற மக்களவைத் தோ்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்காக, சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பால், மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயா்த்திய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் விரைவில் 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் ஸ்ரீதா், ராகவன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.