திருவண்ணாமலையில் அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைச் சுற்றி இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை அனுமதிக்கக் கூடாது.
கிரிவலப் பாதையில் அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவதை தடை செய்ய வேண்டும். அன்னதானம் என்ற பெயரில் கிரிவலப் பாதையை அசுத்தம் செய்வதை ஏற்க முடியாது. ஆன்மிக பெருமக்கள் யாரும் குறைகூறாத வகையில் தீபத் திருவிழாவை நடத்தி முடிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட எஸ்பி
கி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.