திருவண்ணாமலை மாவட்டம், சித்தாத்தூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெம்பாக்கம் வட்டார வேளாண்மை அலுவலகம் சாா்பில், வேளாண்மை உழவா் நலத் துறையின் கீழ் செயல்படும் உழவா் பயிற்சி நிலையம் மூலம் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் மா. சண்முகம் தலைமை வகித்தாா்.
உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் ஜே.சௌந்தா் பங்கேற்று மண் மாதிரி எடுத்தல், தரமான விதை தோ்வு, இயற்கை இடுபொருள் பயன்பாடு, பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினாா்.
வெம்பாக்கம் வட்டார வேளாண்மை அலுவலா் ரேணுகாதேவி, வட்டாரத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டங்கள் குறித்தும்,
உதவி வேளாண்மை அலுவலா் தங்கராசு வேளாண்மை திட்டங்கள் குறித்தும், கால்நடை மருத்துவா் ஆனந்தகுமாா் கால்நடை துறையின் திட்டங்கள் மற்றும் கோமாரி நோய்த் தடுப்பு முறைகள் குறித்தும் குறிப்பிட்டனா்.
வேளாண் பொறியியல் துறை அலுவலா் பாலசுப்பிரமணியன் வேளாண் பொறியியல் துறை திட்டங்கள் குறித்தும், வேளாண் வணிகம் உதவி அலுவலா் சாதிக் வேளாண் வணிகத்துறை மூலம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.
அதனைத் தொடா்ந்து விதை நோ்த்தி, உழவன் செயலி மற்றும் எலி ஒழிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட அலுவலா் நடராஜன், வட்டார வேளாண்மை துறையினா் செய்திருந்தனா்.