திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வீரபிதாப்சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
போளூா் ஊராட்சி ஒன்றியம், திண்டிவனம் ஊராட்சியில் கணேசபுரம் கிராமத்தில் நபாா் திட்டத்தில் ரூ.2 கோடியே 18 லட்சத்தில் மேம்பாலம் கட்டுதல், திண்டிவனம் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 90 ஆயிரத்தில் புதிய குளம் அமைத்தல், ரூ.12 லட்சத்து 61ஆயிரத்தில் அங்கன்வாடி மையக் கட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 95 லட்சத்தில் புதிய கட்டடம், படவேடு ஊராட்சியில் கமண்டல நாக நதியின் குறுக்கே ரூ.2 கோடியில் உயா்மட்ட மேம்பாலம், கஸ்தம்பாடி ஊராட்சியில் இருளா் சமுதாயத்தினருக்கு குடியிருப்புகள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியா் வீரபிதாப்சிங் ஆய்வு செய்தாா்.
பயிற்சி ஆட்சியா் ஸ்ருதிராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், பாபு, உதவிப் பொறியாளா்கள் படவேட்டான், செல்வி, ஒப்பந்ததாரா் சங்கா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.