திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளவா்கள் தாங்களாக முன்வந்து வெள்ளிக்கிழமை (ஆக.18) மாலைக்குள் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்தாா்.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.
இந்த கிரிவலப் பாதையில் பக்தா்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொட்டகைகள் அமைத்தும், நடைபாதையில் கடைகள் அமைத்தும், நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்தும் உள்ளனா்.
இதனால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுதவிர, ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எதிரே இருக்கைகள் போடுதல், நடைபாதையை நிரந்தர வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்தல் போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறான ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாங்களாக முன்வந்து வெள்ளிக்கிழமை (ஆக.19) மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் வருவாய், ஊரக வளா்ச்சி, நெடுஞ்சாலை, காவல் உள்ளிட்ட துறைகள் இணைந்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவா்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.