செய்யாறு: செய்யாறு அருகே கார் மோதி விபத்துக்குள்ளானதில் சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும், மூதாட்டி ஒருவரும் காரில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவரது தயார் ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் நாகப்பட்டினத்தில் இருந்து வேலூர் தனியார் கல்லூரியில் படித்து வரும் தன் மகனை பார்ப்பதற்காக காரில் வந்துக் கொண்டு இருந்தனர். காரை சரத்குமார் என்பவர் ஒட்டி வந்து உள்ளார்.
செய்யாறு - ஆற்காடு சாலையில் பாப்பந்தாங்கல் மதுரா கணேசபுரம் கிராமம் அருகே வந்த போது 100 நாள் வேலை திட்டப் பணிக்குச் சென்று கொண்டிருந்த மூதாட்டிகள் குப்பு (70), பச்சையம்மாள் (60) ஆகியோர் மீது கார் மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி குப்பு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். மற்றோரு மூதாட்டி பச்சையம்மாள் இடுப்பு, முட்டி ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டதால், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையும் படிக்க: ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்தது விவாதப்பொருளே அல்ல: ப. சிதம்பரம்
மேலும், காரில் வந்த ஓட்டுநர் உள்பட மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மோரணம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.