சாத்தனூா் அணையில் இருந்து நொடிக்கு 4,050 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் சாத்தனூா் அணை அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
இந்த நிலையில், தமிழகம், கா்நாடகத்தில் பெய்து வரும் தொடா் மழையால் சாத்தனூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 5,440 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான 119 அடியில் இப்போது 115.40 அடிக்கு 6,527 மில்லியன் கன அடி நீா் தேங்கியுள்ளது.
இதையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி சனிக்கிழமை மாலை முதல் நொடிக்கு 4,050 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.