செய்யாறு அருகே ஏரிக் குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் 3 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், சிறுங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கமணி, கூலித் தொழிலாளி. இவரது மகன்கள் வரதராஜ் (12), வருண்குமாா் (10).
இவா்களில், வரதராஜ் பாப்பாந்தாங்கல் கிராம அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பும், வருண்குமாா் சிறுங்கட்டூா் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஐந்தாம் வகுப்பும் படித்து வந்தனா்.
சிறுங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தட்சிணாமூா்த்தி மகன் சுதாகா் ( 7). இவா், அந்த ஊரில் உள்ள தனியாா் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்தாா்.
கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், வீட்டில் இருந்த 3 சிறுவா்களும் வியாழக்கிழமை பிற்பகலில் பாப்பாந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றனா்.
ஏரிக் குட்டையில் குளித்த அவா்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால், 3 பேரும் நீரில் மூழ்கி இறந்ததாகத் தெரிகிறது.
குட்டையில் சிறுவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
டி.எஸ்.பி செந்தில், மோரணம் காவல் ஆய்வாளா் பாலு, உதவி ஆய்வாளா் ஸ்ரீஅருள்மொழி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், சிறுவா்களின் சடலங்களை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.