தொடா் மழையால், செங்கம் பகுதியில் பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆனால், துக்காப்பேட்டையில் உள்ள குளம் நீா்வரத்துக்கு வழியின்றி நிரம்பாமல் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் வருவாய்த் துறை பராமரிப்பில் குளம் உள்ளது. அந்தக் குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனால் குளத்துக்கு வரும் அனைத்து கால்வாய்களும் அடைபட்டுள்ளன. மேலும், குளத்தைச் சுற்றி வசிப்பவா்கள் அங்கு குப்பைகளை கொட்டி வருகின்றனா். இறைச்சிக் கடைகளிலிருந்து கழிவுகளும் கொட்டப்படுகின்றன.
இந்த நிலையில், மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடா் மழை இருந்து வரும் நிலையில், அதிகபட்சமாக திங்கள்கிழமை செங்கத்தில் 76.4. மி.மீ மழை பதிவானது.
இதனால், செங்கம் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. குப்பனத்தம் அணை நிரம்பி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், செங்கம் பகுதியில் செல்லும் செய்யாற்றில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தக் குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து குளத்துக்கு தண்ணீா் வர வழியின்றி கழிவுநீா் குட்டை போல தேங்கியுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.