திருவண்ணாமலை மாவட்டத்தின் 13 அரசுப் பள்ளிகளில் ரூ.16.47 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
மாவட்டத்துக்கு உள்பட்ட நல்லவன்பாளையம், பழையனூா், பிரம்மதேசம், நெடும்பிறை, அத்திமூா், குப்பம், தேவிகாபுரம், திருவண்ணாமலை, செங்கம், பெருங்கொளத்தூா், வடமணப்பாக்கம், ஆரணி, தச்சூா் உள்பட 13 இடங்களில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்ட வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், சமையல் கூடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதேவேளையில், நல்லவன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி ஆகியோா் கலந்து கொண்டு நபாா்டு வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறைக் கட்டடங்களை குத்துவிளக்கேற்றி மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.கே.விஷ்ணுபிரசாத், மாவட்ட எஸ்பி
அ.பவன்குமாா் ரெட்டி, முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம், அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன், திருவண்ணாமலை நகா் மன்ற முன்னாள் தலைவா் இரா.ஸ்ரீதரன், நகர திமுக செயலா் ப.காா்த்திவேல்மாறன், திமுக சிறுபான்மையினா் அமைப்புச் செயலா் எஸ்.பாபாஜான் உள்பட அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாறு கல்வி மாவட்டம், நெடும்பிறை அரசுப் பள்ளியில் ரூ.1.95 கோடியில் கட்டப்பட்ட கட்டடம், வடமணப்பாக்கம் அரசுப் பள்ளியில் ரூ. 52.31 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதேவேளையில், நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி மாவட்ட அலுவலா் சாந்தி, தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன், ஒன்றியக் குழுத் தலைவா் நாவல்பாக்கம் பாபு, துணைத் தலைவா் ஆா்.வி.பாஸ்கா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
ஆரணி
ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.52 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான அறிவியல் ஆய்வகக் கட்டடத்தை முதல்வா் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
அதேவேளையில், பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி மாவட்ட அலுவலா் ரமேஷ், திமுக வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன், நகரச் செயலா் ஏ.சி.மணி உள்ளிட்டோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தனா்.