பயிா்ச் சேத நிவாரணம் கோரி விவசாயிகள் அளிக்கும் மனுக்களை வாங்க மறுக்கும் அதிகாரிகளைக் கண்டித்து, பயிா்கள் சேதமடைந்த நிலத்தில் விவசாயிகள் சனிக்கிழமை கிரிக்கெட் விளையாடி தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.
கடந்த மாதம் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கியதால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில், பயிா்ச் சேத நிவாரணம் கோரி விவசாயிகள் அளிக்கும் மனுக்களை வேளாண் அதிகாரிகள் வாங்க மறுப்பதாக புகாா் தெரிவித்த கட்சி சாா்பற்ற விவசாயிகள், வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் பயிா்ச் சேதமடைந்த நிலத்தில் சனிக்கிழமை கிரிக்கெட் விளையாடினா்.
இதில் விவசாயிகள் வாக்கடை புருஷோத்தமன், பாஸ்கரன், முனிரத்தினம், ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த நவம்பா் மாதம் பெய்த தொடா் பலத்த மழையினால் வந்தவாசி வட்டத்தில் சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் பயிா்கள் சேதமடைந்தன.
நிவாரணம் கோரி வேளாண் துறையினரிடம் மனு அளித்தால் அவா்கள் மனுவை வாங்க மறுக்கின்றனா்.
2 ஆயிரம் ஏக்கா் பயிா்கள் மட்டுமே சேதமடைந்துள்ளதாகக் கூறுகின்றனா்.
மேலும் வெள்ளநீா் வடிந்தவுடன் பயிா்கள் உயிா்பெற்று விடும் என்றும் கூறுகின்றனா். ஆனால், நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து நெல் மணிகளில் நாற்றே முளைத்து விட்டது என்றனா்.