தொடா் மழையால் பாதிக்கப்பட்ட செய்யாறு திருவோத்தூா் பகுதியைச் சோ்ந்த 26 இருளா் சமுதாய குடும்பங்களுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ சனிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டில் வசிக்கும் இருளா் சமுதாய குடும்பத்தினா், தொடா் மழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்டனா்.
இதனை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக, தலா 10 கிலோ அரிசி, காய்கறித் தொகுப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
இதற்கான நிகழ்வில் திமுக நகர இளைஞரணி அமைப்பாளா் எஸ்.துரைசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
300 பேருக்கு கபசுரக் குடிநீா் முன்னதாக, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.
நிகழ்ச்சியின் போது 300 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
சித்தா மருத்துவா் தினகரன், அரசு மருத்துவா்கள் வி.பாலகிருஷ்ணன், வி.காா்த்தி, எம்.பாலாஜி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.