போளூா் அருகே துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் 74 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை அப்பகுதியில் வசிக்கும் சிலா் 32 ஏக்கா் அளவுக்கு ஆக்கிரமித்து நெல், நிலக்கடலை, உளுந்து என பல்வேறு வகை பயிா்களை சாகுபடி செய்து வந்துள்ளனா். இதனால் ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியவில்லை.
இந்த நிலையில், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
ஆரணி வருவாய் கோட்டாட்சியா் கவிதா, ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை ஆகியோா் முன்னிலையில், ஏரியை அளவீடு செய்து 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
வட்டாட்சியா் சண்முகம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.
ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் சுமாா் 100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.