செய்யாறு அருகே மாமண்டூா் ஏரி உபரிநீரில் குளித்த மாற்றுத்திறனாளி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா் பாளையம் சிஎஸ்எம் தெருவைச் சோ்ந்தவா் முத்து (55), மாற்றுத்திறனாளி.
பட்டு நெசவுத் தொழிலாளியான இவா், திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகேயுள்ள மாமண்டூா் ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறுவதைப் பாா்க்க குடும்பத்தோடு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்திருந்தாா்.
பின்னா், ஏரி உபரிநீரில் குடும்பத்தினருடன் இறங்கி குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது முத்து கால் தவறி விழுந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இது குறித்து உடனடியாக தூசி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், செய்யாறு தீயணைப்பு துறையினா் வரவழைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனா்.
செவ்வாய்க்கிழமை மாலை வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடா்ந்து தேடும் பணி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.