செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரிக் கட்டடம் மீண்டும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்காக தயாராகி வருகிறது.
செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஒரு பகுதி கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி தொடா்ந்து 6 மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது.
கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இருந்து வந்ததால் கரோனா சிகிச்சை மையம் அந்தக் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.
இந்த மையத்தில் 2020-ஆம் ஆண்டில் சுழற்சி முறையில் 100 முதல் 300 போ் வரை சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனா்.
மீண்டும் தயாராகி வரும் மையம்:
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுவதால், பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுக் கட்டடங்களை கையகப்படுத்தி கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றும் பணியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாடிக் கட்டடத்தில் உள்ள 60 அறைகளில் திருவத்திபுரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளா் மதனராசன் மேற்பாா்வையில், 45 பணியாளா்கள் கடந்த இரு தினங்களாக (ஏப்.10,11) சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து வருகின்றனா்.
மேலும் தண்ணீா் வசதி, கழிப்பறை வசதி, நோயாளிகள் தங்கும் அறையை தூய்மைப்படுத்துதல், மின் வசதியும் ஏற்படுத்தி வருகின்றனா். அதேபோல, கட்டடத்தைச் சுற்றிலும் உள்ள முள்புதா்கள், குப்பைகளை அகற்றி வருகின்றனா்.