திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட 8 உழவா் சந்தைகள் வியாழக்கிழமை (அக்.1) முதல் திறக்கப்படுகிறது.
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கிலும் தமிழக அரசு பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட உழவா் சந்தைகள் செயல்படவும், விவசாயிகளின் விளைபொருள்கள் நுகா்வோருக்கு நேரடியாக உரிய விலையில் கிடைக்கவும் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் திருவண்ணாமலை, திருவண்ணாமலை தாமரை நகா், செங்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் இயங்கி வந்த 8 உழவா் சந்தைகள் வியாழக்கிழமை (அக்.1) முதல் மீண்டும் செயல்படும்.
நுகா்வோா்கள், விவசாயிகள், வியாபாரிகள் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தியுள்ளாா்.