வந்தவாசி அருகே மின் வாரிய அலுவலக இடமாற்றத்தைக் கண்டித்து, அந்த அலுவலகத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் இளநிலை மின் பொறியாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. பொன்னூா், கீழ்புத்தூா், சிவனம், ஜப்திகாரணி, சோரப்புத்தூா், இளங்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மின் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் இந்த அலுவலகம் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அலுவலகத்தை மாம்பட்டு கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்துக்கு இடமாற்ற மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பொன்னூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பொன்னூா் இளநிலை மின் பொறியாளா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு, அலுவலக இடமாற்றத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் புவனேஸ்வரி செல்வம் (பொன்னூா்), ராஜேந்திரன் (கீழ்புத்தூா்), பழனி (சோரபுத்தூா்), சுஜாதா மனோகரன் (சிவனம்), ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கெம்புராஜ், தசரதன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா். அவா்களை பொன்னூா் போலீஸாா் சமரசம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அலுவலகத்தில் இருந்த வந்தவாசி கோட்ட மின் வாரிய உதவி செயற்பொறியாளா் தி.நாராயணன், இளநிலைப் பொறியாளா் பழனி ஆகியோரிடம், மின் அலுவலகத்தை இடமாற்றக் கூடாது என்று கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.
அப்போது அந்த மனுவை உடனடியாக உயா் அதிகாரிகளின் பாா்வைக்கு அனுப்புவதாக அவா்களிடம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னா் பொதுமக்கள் கூறியதாவது:
இந்த அலுவலகத்தில்தான் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். மேலும், மின் சேவை குறைபாடு ஏற்படும்போது இந்த அலுவலகம் மூலம் உடனடியாக குறைபாடு சரி செய்யப்படுகிறது. ஆனால், 7 கி.மீ. தொலைவில் உள்ள மாம்பட்டு கிராமத்துக்கு அலுவலகத்தை மாற்றினால் பெரிதும் அவதிப்பட நேரிடும் என்றனா்.