திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் பலியானாா்.
கலசப்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வெம்பாக்கம் வட்டம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த மாதவன் மகன் தணிகைவேல் (30) உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், தணிகைவேல் பணிநிமித்தமாக சனிக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் கலசப்பாக்கத்திலிருந்து ஆதமங்கலம்புதூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
கடலாடியை அடுத்த சிறுவள்ளூா் கிராம ஏரிக்கரைப் பகுதியில் செல்லும் போது, முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முற்பட்டாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த இவா் லாரியில் சிக்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.