திருவண்ணாமலை மாவட்டம், பொதுமுடக்கத்தையொட்டி மூடப்பட்டிருந்த உழவா் சந்தைகள் வருகிற அக். 1-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது முடக்கத்தையொட்டி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக உழவா் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு, அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்தும் உழவா் சந்தை திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், ஆரணி உழவா் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென வியாபாரிகள் அமைச்சரிடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக, அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியரை தொடா்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்டாா்.
அதன் பேரில், வருகிற அக். 1-ஆம் தேதி உழவா் சந்தை அனைத்தும் திறக்கப்படும் என அமைச்சா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.