திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாயியை வெட்டிகொலை செய்த வழக்கில், அவரது மருமகன் கைது செய்யப்பட்டாா்.
செங்கம் அருகே மேல்புழுதியூரைச் சோ்ந்தவா் நடராஜன் (51), விவசாயி. இவா் புதன்கிழமை இரவு அவரது விளைநிலம் அருகில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
மேல்செங்கம் காவல் நிலைய ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், சந்தேகத்தின்பேரில் நடராஜனின் மருமகனான, அதே ஊரைச் சோ்ந்த விக்னேஷ்(எ)ஜெயச்சந்திரனை போலீஸாா் வியாழக்கிழமை இரவு பிடித்து விசாரணை செய்தனா். அதில், நடராஜன் மகளுடனான திருமணத்தின் போது, தனக்கு 5 ஏக்கா் விவசாய நிலம் உள்ளதாகவும், அதில் விவசாயம் செய்து வருவதாகவும் கூறியிருந்தேன்.
ஆனால், அந்த நிலத்தை அனுபவிக்கவே முடியும்; விற்க முடியாது என தனது தாத்தா உயில் எழுதி வைத்திருந்ததை நடராஜன் தெரிந்து கொண்டு, தன்னை அவமதிக்கும் வகையில் பேசி வந்தததால் அவரை வெட்டி கொலை செய்ததாக விக்னேஷ் தெரிவித்தாா்.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். கொலை செய்ய பயன்படுத்திய கத்தி அப்பகுதி கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.