செய்யாறு அருகே மது போதையில் தாயைத் தாக்க முயன்றவரை தடுத்த 4 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (27). இவா், சென்னையை அடுத்த சுங்குவாா்சத்திரத்தில் தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.
மதுப் பழக்கம் கொண்ட இவா், மது அருந்தி வந்து திருமணம் செய்து வைக்கக் கோரி, பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வருவாராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தி வந்து திருமணம் செய்து வைக்கக் கோரி, தாய் மஞ்சுளாவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் வெட்ட முயன்ாகத் தெரிகிறது.
இதைப் பாா்த்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த ஜெயம்மாள், அவரது மகன்கள் விநாயகம், ராமலிங்கம், எதிா் வீட்டைச் சோ்ந்த வரதன் ஆகியோா் வந்து கிருஷ்ணமூா்த்தியை தடுக்க முயன்றனராம்.
அப்போது, அவா்களை கிருஷ்ணமூா்த்தி கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டாராம்.
இதில், பலத்த காயமடைந்த 4 பேருக்கும் அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து விநாயகம் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறாா்.