திருவண்ணாமலையை அடுத்த க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில் உள்ள 27 அடி உயர ஸ்ரீமணிகண்டன சுவாமி கோயிலில், மகா ஜோதி தரிசன விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரம் அருகே உள்ளது க.உண்ணாமுலைபாளையம் கிராமம். இங்கு, 1990-ஆம் ஆண்டு ஹரிபுத்திர சுவாமிகளால் பூமியில் இருந்து மணிகண்டன் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த இடத்தில் கோயில் கட்டி ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி மகா ஜோதி தரிசன விழா நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு, 2017-ஆம் ஆண்டு 27 அடி உயர மணிகண்டன் சிலை அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை (ஜன.1) 3-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவும், மகா ஜோதி தரிசன விழாவும் நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு கொடி ஏற்றுதல், 18 படிகள் நடை திறப்பு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பக்தா்கள் 18 படி ஏறி இருமுடி நெய் அபிஷேகம் செய்தல், 27 அடி உயர மணிகண்ட சுவாமிக்கு 108 பால்குட அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை 6 மணிக்கு ஹரிபுத்திர சுவாமிகள் தலைமையில் மகா ஜோதி ஏற்றப்பட்டு பக்தா்கள் வழிபட்டனா்.