செய்யாறில் சனிக்கிழமை பெய்த மழையால் இடி தாக்கி திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் கோபுரம் சேதமடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 5.45 மணியளவில் பலத்த இடி சப்தத்துடன் மின்னல் வீசியது.
அப்போது, திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் யாழி கொடுங்கை சேதமடைந்தது.
ராஜகோபுரம் மற்றும் கோயில் உள்கோபுரத்தில் இடி தாங்கி வைக்கப்பட்டிருந்த போதிலும், அதிவேக மின்னல் வீசி, ராஜகோபுரத்தின் மீது இடி விழுந்தது. இதனால், அதில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி சேதமடைந்து கீழே விழுந்தது.
மேலும், கோயிலில் உள்ள மின் சாதனப் பொருள்கள், 25 கண்காணிப்புக் கேமராக்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.