வந்தவாசி அருகே ரூ.1500 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் அப்பாசாமியை (57) ஊழல் தடுப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கபாலி (59). இவர் வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட அதியனூரில் சுமார் 1.5 ஏக்கர் விவசாய நிலம் வாங்கி அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். இதற்கு மின் இணைப்பு பெற, தடையில்லா சான்று கோரி அதியனூர் கிராம நிர்வாக அலுவலர் அப்பாசாமியை கபாலி அணுகினார். ரூ.1500 லஞ்சம் கொடுத்தால்தான் சான்று தரமுடியும் என்று அப்பாசாமி தெரிவித்தாராம்.
இதுகுறித்து கபாலி திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் திங்கள்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கபாலியிடம் கொடுத்து அதை அப்பாசாமியிடம் கொடுக்குமாறு ஊழல் தடுப்பு போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அதியனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் அப்பாசாமியிடம் கபாலி ரூ.1500 லஞ்ச பணம் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான ஊழல் தடுப்பு போலீஸார் அப்பாசாமியை கைது செய்தனர்.