செய்யாறு அருகே தேர்வு முடிவுகள் வெளியான நாளில் பத்தாம் வகுப்பு மாணவி மாயமானதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
செய்யாறு வட்டம், தும்பை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் கூலித் தொழிலாளி சுரேஷ். இவரது மகள் பவானி (16). இவர் பல்லி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று, மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வை எழுதியிருந்தார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி பவானி தேர்ச்சி பெற்று 295 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான திங்கள்கிழமை அவர் மனநிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. தந்தை சுரேஷ் வேலைக்குச் சென்று வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த மகளைக் காணவில்லையாம்.
இதுகுறித்து சுரேஷ் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் பழனிசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.