வந்தவாசி அருகே நிலத் தகராறில் அண்ணனைக் கொலை செய்ததாக தம்பி உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசியை அடுத்த அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (57). இதே கிராமத்தைச் சேர்ந்தவர் இவரது தம்பி தாமோதரன் (55). இருவருக்கும் அந்த கிராம ஏரியை ஒட்டி அடுத்தடுத்து நிலம் உள்ளது. இவர்களது நிலத்தின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை அனுபவிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் பாலாஜி திங்கள்கிழமை இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயன் என்பவருடன் சேர்ந்து தனது நிலத்தில் மாந்திரீக பூஜையில் ஈடுபட்டாராம். இதை அறிந்து அங்கு வந்த தாமோதரன், அவரது மனைவி சாந்தா (46), மகன் அமல்நாத் (25) ஆகியோர் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்தனராம்.
அப்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து கத்தி, இரும்பு பைப் ஆகியவற்றால் பாலாஜியை தாக்கிவிட்டுச் சென்றனராம். இதில் பலத்த காயமடைந்த பாலாஜியை அவரது குடும்பத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இதுகுறித்து பாலாஜியின் மகன் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் தாமோதரன், சாந்தா, அமல்நாத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்த தெள்ளாறு போலீஸார் தாமோதரன், சாந்தா ஆகிய இருவரைக் கைது செய்தனர்.