காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகரான தரத்துக்கு தமிழக அரசு உயர்த்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த வேண்டும். அவற்றை ஜி.எஸ்.டி. வரைமுறைக்குள் கொண்டு வந்து, விலை நிர்ணயம் செய்ய வேண்டும். காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் தரிசன நிகழ்வைக் காண ஏராளமானோர் வருவதால், தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும். காமராஜரின் தொலைநோக்கு திட்டங்களைச் செயல்படுத்தி, தண்ணீர் பஞ்சத்தைப் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நிச்சயம் வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் பாடுபடும் என்றார் அவர்.