வந்தவாசியில் திருமண மண்டப படிக்கட்டில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (62). இவரது மனைவி வசந்த கோகிலா (55). இவர்களது மகன் மோகன்ராஜ் அங்குள்ள நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ராமலிங்கம், வசந்த கோகிலா மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க 2 பேருந்துகளில் காஞ்சிபுரத்துக்கு செல்வதற்காக சனிக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டனர். செல்லும் வழியில் வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை இரவு தங்கினர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காஞ்சிபுரத்துக்கு புறப்படுவதற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனராம்.
அப்போது ராமலிங்கம் மண்டப மாடியில் உள்ள குளியலறைக்கு செல்வதற்காக படி ஏறியுள்ளார். அப்போது படியிலிருந்து தவறி விழுந்த அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வசந்த கோகிலா அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.