வந்தவாசியில் குடிநீர் வழங்கக் கோரி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 6-ஆவது, 7-ஆவது வார்டு பகுதிகளில் கடந்த 25 நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் குளத்துமேடு பகுதியில் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி மற்றும் வந்தவாசி தெற்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.