திருவண்ணாமலை

10 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட  விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது: கோட்டாட்சியர் ஸ்ரீதேவி

30th Aug 2019 08:42 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தில் 10 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்கு வைக்கக் கூடாது என்று கோட்டாட்சியர் ஸ்ரீதேவி கூறினார்.
திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, திருவண்ணாமலை வட்டாட்சியர் கே.அமுல், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை (திருவண்ணாமலை நகரம்), ஹேமசித்ரா (திருவண்ணாமலை ஊரகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கோட்டாட்சியர் ஸ்ரீதேவி பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித பிரச்னைக்கும் இடமளிக்காமல் நல்ல முறையில் நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்ல டிராக்டர், மினி லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 10 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட சிலைகளை வழிபாட்டுக்கு வைக்கக் கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
கூட்டத்தில், வருவாய் ஆய்வாளர் ராஜா, வழக்குரைஞர் டி.எஸ்.சங்கர், வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.டி.தனகோட்டி மற்றும் இந்து முன்னணி, பாஜக, இந்து மக்கள் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT