திருவண்ணாமலை

செய்யாறு தனி மாவட்டம்: எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு

30th Aug 2019 08:40 AM

ADVERTISEMENT

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக  மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ஒருங்கிணைந்தும்,  வழக்குரைஞர்கள் சங்கம் சார்பிலும், தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
செய்யாறோடு தொடங்கப்பட்ட திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்கள் மாவட்டங்களாக அமையப் பெற்று உள்ள நிலையில், செய்யாறையும் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, செய்யாறை மாவட்டமாக கோரும் இயக்கம் சார்பில், செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து அண்மையில் ஊர்வலமாகச் சென்று, தொகுதி சட்டப்பேரவை அலுவலகத்தில் தூசி கே.மோகன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதேபோன்று,  வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் டி.விநாயகம் தலைமையில் ஊர்வலமாகச் சென்று கோரிக்கை மனுவை எம்.எல்.ஏ தூசி மோகனிடம் வழங்கினர்.
எம்எல்ஏ உறுதி மனுக்களைப் பெற்றுக்கொண்ட துசி கே.மோகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
  தேர்தல் பிரசாரத்தின் போது செய்யாறில் பேசிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த படியும், செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க  இப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன். 
இதுகுறித்து மூன்று முறை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பேசியுள்ளேன் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT