வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதைக் கண்டித்தும், குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக் கோரியும், செய்யாறு, ஆரணி, செங்கம் ஆகிய பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொகுதிச் செயலர் மேனல்லூர் எ.குப்பன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் ம.பிரியா, த.மேனகா தணிகாவளவன், பெ.வள்ளியம்மாள், நகரச் செயலர் துரை.சாண்டில்யன், ஒருங்கிணைப்பாளர் அ.லோகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆரணி
ஆரணியை அடுத்த களம்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கட்சியின் ஆரணி தொகுதிச் செயலர் முத்து தலைமையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் கோபி, இளங்கோ, ஜெய்சங்கர், செல்வக்குமார், தமிழ், விஜயகாந்த், சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செங்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செங்கம் நகரம், ஒன்றியம் சார்பில், அக்கட்சியினர் மேல்பள்ளிப்பட்டு, தோக்கவாடி, இறையூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.