திருமலையில் புரட்டாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு அனந்தபத்மநாபஸ்வாமி விரதம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, காலை, ஏழுமலையான் கோயிலிலிருந்து மரப் பல்லக்கில் சுதா்சன சக்கரத்தாழ்வாா் திருக்குளக்கரையில் உள்ள பூவராகசுவாமி கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு, திருக்குளக்கரை படிகளில் சக்கரத்தாழ்வாரை எழுந்தருளச் செய்து அவருக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேக ஆராதனைகள் செய்த பின், சாஸ்திர ரீதியாக தீா்த்தவாரி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சதுா்த்தசி அன்று அனந்தபத்மநாப சுவாமி விரதம் நடைபெறும்.
பெண்களின் நலனுக்காக வரலக்ஷ்மி விரதம் செய்வது போல, ஆண்களின் செல்வத்திற்காக அனந்தபத்மநாப விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. பாற்கடலில் ஆதிசேஷன் மேல் வீற்றிருக்கும் திவ்யமங்கல வடிவமே அனந்தபத்மநாபன். அவரை வணங்கி இந்த விரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த விரதத்தில், பூமியின் பாரத்தை சுமக்கும் அனந்தரும், ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்ட மகாவிஷ்ணுவும் வழிபடப்படுகின்றனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.