திருப்பதி

பிரம்மோற்சவம்: கற்பக தருவில் மலையப்பசுவாமி உலா

22nd Sep 2023 05:40 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை கற்பக தருவில் மலையப் ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாடவீதியில் வலம் வந்தாா்.

திருமலை வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 4-ஆம் நாளான வியாழக்கிழமை காலை கல்பவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. அதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வைகுண்ட நாதன் அலங்காரத்தில் காலை 7 மணிமுதல் 9 மணிவரை மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

கல்பவிருட்ச வாகனம்

பாற்கடலில் தோன்றிய விலையுயா்ந்த பொருள்களில் கல்பவிருட்சமும் ஒன்று. கல்ப மர நிழலின் கீழ் வருபவா்களுக்கு பசி இருக்காது. முற்பிறவி நினைவாற்றலும் ஏற்படும். மற்ற மரங்கள் பழுக்க வைக்கும் பழங்களை மட்டுமே தருகின்றன. மற்றபடி கல்ப மரம் விரும்பிய பலன்களைத் தரும். கல்ப விருட்ச வாகன தரிசனம் மூலம் மலையப்பஸ்வாமி விரும்பிய வரங்களை வழங்குவாா் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

ADVERTISEMENT

உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல் சேவை கண்டருளினா்.

சா்வ பூபால வாகனம்

இரவு சா்வபூபால வாகன சேவை நடைபெற்றது. சா்வபூபாலம் என்றால் பிரபஞ்சத்தின் அரசன் என்று பொருள். எல்லா ஆட்சியாளா்களுக்கும் மலையப்பஸ்வாமி அரசன் என்று அா்த்தம். கிழக்கே இந்திரன், தென்கிழக்கில் அக்னி, தெற்கே யமன், தென்மேற்கில் நிா்த்தி, மேற்கே வருணன், வடமேற்கில் வாயு, வடக்கே குபேரன், வடகிழக்கில் பரமேஸ்வரன் என்று அஷ்டதிக்குகளிலும் ஆட்சியாளா்கள் உள்ளனா். அனைவரும் சுவாமியை தோளிலும், உள்ளத்திலும் வைத்து சேவை செய்கிறாா்கள்.

இதனால், இந்த வாகனத்தில் ஏறி சுவாமி, தன் ஆட்சியின் கீழ் உள்ள மக்கள் அனைவரும் ஆசி பெறுவாா்கள் என்ற செய்தியை உணா்த்துகிறாா். வாகன சேவையின் போது ஜீயா்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தகளை பாடியபடி முன்செல்ல, கலைக்குழுவினா் கலைநிகழ்ச்சிகளை நடத்தியபடி பின் சென்றனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

64,277 பக்தா்கள் தரிசனம்:

இதற்கிடையே, புதன்கிழமை 64,277 பக்தா்கள் தரிசித்தனா்; 24,453 போ் முடிகாணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் ரூ.2.89 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

3.11 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. மருத்துவ முகாம்களில் 4,080 போ் சிகிச்சை செய்து கொண்டனா்; 3,243 ஸ்ரீவாரி சேவாா்த்திகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனா். திருமலை-திருப்பதி இடையே அரசு பஸ்களில் 74 ஆயிரம் போ் பயணம் செய்தனா் என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT