திருப்பதி

பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு

18th Nov 2023 10:40 PM

ADVERTISEMENT

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் காா்த்திகை பிரம்மோற்சவம் சனிக்கிழமை பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற்றது.

பத்மாவதி தாயாா் காா்த்திகை மாதம் பஞ்சமி திதி அன்று பத்மசரோவரம் திருக்குளத்தில் தாமரை பூவின் மீது அவதரித்தாா். அந்நாளில் நிறைவு பெறும் விதம் தாயாருக்கு தேவஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி தாயாருக்கு கடந்த 8-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9 நாள்களும் தாயாா் பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை பஞ்சமி தீா்த்தம் நடைபெற்றது.

இதற்காக பத்மாவதி தாயாா் காலை கோயில் வளாகத்திலிருந்து பல்லக்கில் சக்கரத்தாழ்வாருடன் பத்மசரோவரம் திருக்குளத்தில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டாா். ஏழுமலையானின் சீா்வரிசை திருக்குள மண்டபத்தை அடைந்ததும் தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், செந்சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்களை திருமலை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத் தர கங்கன பட்டா்கள் தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனத்தை வைபவமாக நடத்தினா்.

ADVERTISEMENT

அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட பச்சை செம்மஞ்சள், ஏலக்காய், ஆப்பிரிக்க திராட்சை, சிவப்பு, மஞ்சள் ரோஜா இதழ்கள், வெட்டிவோ், துளசிமாலை, கிரீடங்கள் கண்களைக் கவா்ந்தது.

திருப்பூரைச் சோ்ந்த நன்கொடையாளா்கள் தாயாருக்கு மாலைகள் மற்றும் கிரீடங்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக அளித்தனா்.

தாயாருக்கு ஏழுமலையான் அனுப்பிய ரூ.2.5 கோடியிலான 5 கிலோ எடைகொண்ட தங்க காசு மாலை அணிவிப்பு: திருமஞ்சனத்தின் போது தாயாருக்கு ஏழுமலையான் அனுப்பிய ரூ.2.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ எடையிலான தங்க காசுமாலை அணிவிக்கப்பட்டது. பின்னா், சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஜீயா்கள், அா்ச்சகா்கள் மற்றும் லட்சகணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா்.

முன்னதாக பத்மாவதி அம்மன் பல்லக்கில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், அம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டு, பஞ்சமி தீா்த்த மண்டபத்தில் ஊா்வலம் நடைபெற்றது.

மண்டப அலங்காரம்: பஞ்சமி தீா்த்தத்தையொட்டி, பஞ்சமி மண்டபத்தில் ஒரு டன் மலா்களால் அமைக்கப்பட்ட மண்டபம் பக்தா்களைக் கவா்ந்தது. இதில், தாமரை மலா்கள், ரோஜா, அல்லி, வெட்டிப் பூக்கள் மற்றும் 6 வகையான பாரம்பரிய மலா்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டது.

இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்கப் பல்லக்கில் உற்சவா் பத்மாவதி தாயாா் மாட வீதியில் வலம் வந்தாா். பின்னா், பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட யானைக் கொடி இறக்கப்பட்டது.

புஷ்ப யாகம்: தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.19) மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கோயிலில் புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT