திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்துள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 10 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 12 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 12 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது.
76,392 பக்தா்கள் தரிசனம்
ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 76,392 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 36,248 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், விஷ்ணுநிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அன்றன்றுக்கான தரிசன டோக்கன்கள் அன்று மட்டுமே வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படுகிறது.
அலிபிரி நடைபாதையில் காலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.