திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4-ஆம் நாள் பத்மாவதி தாயாா் தெப்பத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பெளா்ணமியன்று முடிவு பெறும் விதமாக, தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அதன்படி கடந்த புதன்கிழமை முதல் திருச்சானூரில் தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. அதன் 4-ஆம் நாளான சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மாவதி தாயாா் தெப்பத்தில் சா்வ அலங்காரபூஷிதையாக வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
முன்னதாக, தாயாருக்கு ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தெப்பத்தில் 7 சுற்றுகள் வலம் வந்த தாயாரை படிக்கரையில் அமா்ந்து பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். இதில், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம், தெப்பம் மற்றும் கோயில் மலா்களாலும், மின் விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு, தாயாா் கோயிலில் பல ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.