திருப்பதி

திருமலை ஏழுமலையான் கோயில் 2022 உண்டியல் காணிக்கை ரூ.1,446 கோடி

1st Jan 2023 12:32 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானுக்கு நிகழாண்டு பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ. 1,446 கோடி என தேவஸ்தானம் தெரிவித்தது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமலை ஏழுமலையான் கோயில் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்தது.

2022-ஆம் ஆண்டு கரோனா தொற்று குறைந்து பக்தா்கள் திருமலைக்கு இயல்பாகச் சென்று வந்தனா். பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், காணிக்கை செலுத்துவதும் அதிகரித்தது.

கரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதும், ஜனவரியில், ரூ. 79.39 கோடியும், பிப்ரவரியில் ரூ. 79.33 கோடியும் உண்டியலில் பக்தா்கள் காணிக்கை செலுத்தினா்.

ADVERTISEMENT

பின்னா், கரோனா பரவல் குறைந்ததால், மாா்ச் முதல் வாரத்தில் இருந்து பக்தா்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிகரித்ததுடன், ஆா்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன.

இதனால், பக்தா்களின் எண்ணிக்கையுடன், உண்டியல் வருமானமும் அதிகரித்தது.

அதன்படி, மாா்ச் மாதம் ரூ. 128.64 கோடியும், ஏப்ரலில் ரூ.127.65 கோடியும், மே மாதத்தில் ரூ. 130.34 கோடியும், ஜூன் மாதம் ரூ. 123.74 கோடியும், ஜூலையில் ரூ. 139.33 கோடியும் வருவாய் கிடைத்தது.

ஆகஸ்ட் மாதம் ரூ. 140.34 கோடியாக ஒரே மாதத்தில் உண்டியல் வருவாய் அதிகரித்தது. தேவஸ்தான வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருவாய் கிடைத்தது.

தொடா்ந்து, செப்டம்பரில் ரூ.122.19 கோடி, அக்டோபரில் ரூ. 122.83 கோடி, நவம்பரில் ரூ. 127.31, டிசம்பரில் (30-ஆம் தேதி வரை) உண்டியல் வருமானம் ரூ. 125.19 கோடியை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

நிகழாண்டு (2022) மொத்த உண்டியல் காணிக்கை வருமானம் சுமாா் ரூ.1,446.05 கோடியாகும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2022-2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில், உண்டியல் வருவாய் ரூ. 1,000 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2.54 கோடி பக்தா்கள் தரிசனம்: நிகழாண்டு ஜனவரி மாதம் 9,96,093 பக்தா்களும், பிப்ரவரியில் 10,95,724, மாா்ச்சில் 19,72,741, ஏப்ரலில் 20,64,915, மே மாதத்தில் 22,61,641 பக்தா்களும் ஏழுமலையானை தரிசனம் செய்தனா்.

ஜூன் மாதம் 23,23,421, ஜூலையில் 23,40,229 ஆகஸ்டில் 22,22,184, செப்டம்பரில் 21,12,254, அக்டோபரில் 22,74,265, நவம்பரில் 20,77,816, டிசம்பரில் 19,47,361 பக்தா்கள் (30-ஆம் தேதி வரை) என மொத்தம் 2.54 கோடி பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா்.

இதேபோல், சுமாா் 11.42 கோடி லட்டுகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT