சீனிவாசமங்காபுரம் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதை முன்னிட்டு ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கோயிலில் காலை, 6.30 மணி முதல் 11 மணி வரை ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. அதில் கோயில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜைப் பொருட்கள் போன்றவற்றை நீரால் சுத்தப்படுத்திய பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீரால் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
அதன்பிறகு பக்தா்கள் தா்ம தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். கோயில் சுத்தப்படுத்திய பின்னா் 2 திரைசீலைகள் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.