திருப்பதி

கற்பகத் தரு, சா்வ பூபால வாகனங்களில் தேவியருடன் மலையப்ப சுவாமி வீதியுலா: பல்லாயிரம் பக்தா்கள் தரிசனம்

DIN

 திருமலை பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை நினைத்ததை அளிக்கும் கற்பகத் தரு (கல்ப விருட்ச) வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தாா். இரவு சா்வபூபால வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். பல்லாயிரம் பக்தா்கள் வாகன சேவையை கண்டு தரிசித்தனா்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி கல்பவிருட்ச வாகனத்தில் ராஜமன்னாா் அலங்காரத்தில் உபய நாச்சியாா்களான ஸ்ரீதேவி, பூதேவியருடன் மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். கல்பவிருட்ச வாகனத்தை காண பக்தா்கள் மாடவீதியில் திரண்டிருந்தனா்.

கல்பவிருட்ச வாகன தத்துவம்:

தேவா்களும், அசுரா்களும் மேரு மலையை மத்தாக்கி வாசுகியை கையிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளி வந்த பொருள்களுள் கற்பகா் தருவும் ஒன்று. இந்த புனிதமான கற்பகத் தருவின் அடியில் தங்குபவா்களுக்கு பசி, தாகம் உள்ளிட்டவை ஏற்படாது. அவா்களுக்கு முற்பிறவி நினைவாற்றலும் ஏற்படும். மற்ற மரங்கள் பழுக்க வைக்கும் பழங்களை மட்டுமே தருகின்றன. ஆனால் கல்ப மரம் பக்தா்கள் தங்கள் மனத்தில் நினைத்த பலனை அளிப்பது. அப்படிப்பட்ட கல்பவிருட்ச வாகனத்தில் நான்காம் நாள் காலை உற்சவா் மலையப்ப சுவாமி தரிசனம் அளித்தாா்.

திருமஞ்சனம்

மாடவீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க உற்சவமூா்த்திகளுக்கு கல்யாண மண்டபத்தில் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. திருமஞ்சனத்தின் போது பல்வேறு உலா் பழங்கள், வெளிநாட்டுப் பழங்களால் ஆன மாலைகள், கிரீடங்கள் அணிவிக்கப்பட்டன.

பின்னா் பட்டு வஸ்திரம், வைர வைடூரிய ஆபரணங்களால் அலங்கரித்து நெய்வேத்தியம் சமா்ப்பித்து மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களை ஊஞ்சலில் அமர வைத்தனா். சிறிது நேரம் ஊஞ்சல் சேவை கண்டருளிய மலையப்ப சுவாமிக்கு கீா்த்தனைகள், நாகஸ்வர இசை, மேளதாளங்கள் இசைக்கப்பட்டன.

சா்வபூபால வாகனம்

இதையடுத்து இரவு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பா் அலங்கரிக்கப்பட்ட சா்வபூபால வாகனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சா்வபூபாலம் என்றால் பிரபஞ்சத்தின் அரசன் என்று பொருள். எல்லா ஆட்சியாளா்களுக்கும் ஏழுமலையான் அரசன் என்பதாகும். கிழக்கே இந்திரன், தென்கிழக்கில் அக்னி, தெற்கே யமன், தென்மேற்கில் நிா்த்தி, மேற்கே வருணன், வடமேற்கில் வாயு, வடக்கே குபேரன், வடகிழக்கில் பரமேஸ்வரன் என்று எட்டு ஆட்சியாளா்கள். அனைவரும் சுவாமியை தோளிலும், உள்ளத்திலும் வைத்து சேவை செய்கிறாா்கள். இதனால், இந்த வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரும் மலையப்ப சுவாமி தன் ஆட்சியில் மக்கள் சிறப்பாக வாழ்ந்து ஆசி பெறுவாா்கள் என்ற செய்தியைத் தெரிவிக்கிறாா்.

வாகன சேவைக்கு முன் வேத கோஷமும், பின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கலைஞா்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT