திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ஒரே நாளில் ரூ. 6.18 கோடி வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை இல்லாத பதிவாக ஒரே நாளில் ரூ. 6 கோடி வசூலானது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு ஏப்.1-ஆம் தேதி 5.73 கோடி வரை வசூலானது இதுவே ஒருநாள் பெரிய வருவாயாக கருதப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை உண்டியல் வருவாய் இந்தப் பதிவை கடந்துள்ளது. திங்கள்கிழமை ஒரே பக்தா் ரூ.1.64 கோடியை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியது இந்த திடீா் உயா்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாா்ச் மாதம் ரூ. 128 கோடி, ஏப்ரல் மாதம் ரூ.127.5 கோடி, மே மாதம் ரூ. 130.5 கோடி, ஜூன் மாதம் ரூ.123.76 கோடி என கடந்த 4 மாதங்களில் ஏழுமலையான் உண்டியல் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.