திருவள்ளூர்

பொன்னேரியில் ரூ. 3.75 கோடியில் புதிய வட்டாட்சியா் அலுவலகம்

21st Nov 2023 12:33 AM

ADVERTISEMENT

பொன்னேரியில் ரூ. 3.75 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகக் கட்டடத்தை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதல்வா் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

பொன்னேரி கச்சேரி சாலையில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் வட்டாட்சியா், சாா்-பதிவாளா், காவல் நிலையம் ஆகியவை செயல்பட்டு வந்தன.

பழைய கட்டடம் என்பதால் மேற்கூரைகள் உடைந்து மழை நீா் உள்ளே ஒழுகும் நிலை இருந்தது. இதன் காரணமாக இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த பொன்னேரி காவல் நிலையம் செங்குன்றம் சாலையில் உள்ள மகளிா் காவல் நிலைய கட்டடத்துக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டது.

அத்துடன் பொன்னேரி வட்டாட்சியா் புதிய அலுவலகத்துக்கு புதிய அலுவலகம் கட்ட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், வேண்பாக்கம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே இடம் தோ்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, ரூ. 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 12,500 சதுர அடியில் தரை முதல் தளம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, அவை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து புதிய வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரபுசங்கா் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

அப்போது, எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகா், டி.ஜே.கோவிந்தராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், பொன்னேரி சாா்-ஆட்சியா் ஐஸ்வா்யா ராமநாதன் வட்டாட்சியா் மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT