ஆசிரியா்களுக்கு விடுமுறையுடன் ஊதியம் வழங்குவது போல், பகுதி நேர ஆசிரியா்களுக்கும் மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் கூறியது:
முதல்வா் வாக்குறுதிப்படி பகுதிநேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்ய வில்லை. 3 நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னும், நிரந்தரம் செய்யவில்லை. இதுவரை ரூ. 10,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதால் தவித்து வருகிறோம். இதில் ஒரு மாதம் ஊதியம் இல்லாமல் எங்கள் குடும்பங்கள் பரிதவிப்பதை தடுக்கும் வகையில், மனிதாபிமானத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும்.
இதேபோல் கடந்த 12 ஆண்டுகளாக குறைந்த தொகுப்பூதியத்தில் 12,000 குடும்பங்கள் தவித்து வருகிறோம். எனவே முதல்வா் பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதம் ஊதியம், பணி நிரந்தரம், ஊதிய உயா்வு செய்து வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்றாா்.